
2021 ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு இரு விஞ்ஞானிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படுவதாக நோபல் தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
ஜெர்மனியைச் சேர்ந்த பெஞ்சமின் லிஸ்ட், பிரிட்டனைச் சேர்ந்த டேவிட் மெக்மில்லன் ஆகியோருக்கு இவ்வாறு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
வேதியியல் மூலக்கூறு கட்டுமானத்திற்கான புதிய மற்றும் தனித்துவமான வினையூக்கி (asymmetric organocatalysis ) கருவியை உருவாக்கியதற்காக குறித்த இரு விஞ்ஞானிகளும் நோபல் பரிசை பெறுகின்றனர்.
BREAKING NEWS:
The 2021 #NobelPrize in Chemistry has been awarded to Benjamin List and David W.C. MacMillan “for the development of asymmetric organocatalysis.” pic.twitter.com/SzTJ2Chtge— The Nobel Prize (@NobelPrize) October 6, 2021
2021 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஒக்டோபர் 5 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்டு வருகின்றன.
மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகளான டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் ஆகியோருக்கு, வெப்பநிலை மற்றும் தொடுதலுக்கான ஏற்பிகளைக் (சென்சார்) கண்டுபிடித்ததற்காக 5 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.
இயற்பியலுக்கான நோபல் பரிசு புவியின் காலநிலையில் மாறுபாட்டை அளவிடுதல் மற்றும் வெப்பமடைதல் கணித்தல் ஆகியவற்றிற்காக அமெரிக்காவின் ஸ்கியூரோ மனாபே, ஜெர்மனியின் கிளாஸ் ஹசில்மேன், இத்தாலியின் ஜார்ஜியோ ஆகிய விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக 06 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
அமைதிக்கான நோபல் பரிசு நோர்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது.