May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பெண் ஊழியர்களை வீட்டிலேயே இருக்குமாறு காபூலின் புதிய மேயர் பணிப்பு!

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலின் மேயர் ஹம்துல்லா நோமன், நகரத்தில் உள்ள பெண் ஊழியர்களை வீட்டிலேயே இருக்குமாறு கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் புதிய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிலையில்,பெண்களுக்கு எதிரான பல கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, தலைநகர் காபுலின் புதிய மேயராக பதவி ஏற்றுள்ள ஹம்துல்லா நோமன், “பெண்கள்  வேலை செய்வதை சிறிது காலத்திற்கு தடுப்பது அவசியம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு நகரத்தின் 3,000 ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் பணியாற்றுவதாக அவர் கூறினார்.

புதிய சட்டத்தின் படி, உதாரணமாக “நகரத்தில் ஆண்கள் செல்ல முடியாத பெண்கள் கழிப்பறைகளில் பெண்கள் வேலை செய்கிறார்கள்” என்றும் அவர் கூறினார்.

கடந்த மாதம் அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து நாட்டை கைப்பற்றிய தாலிபான்கள் பெண்கள் உரிமைகள் “இஸ்லாமிய சட்டத்தின் கட்டமைப்பிற்கு அமைய மதிக்கப்படும் என்று கூறியிருந்தனர்.

எனினும் அவர்கள் இஸ்லாத்தின் ஒரு சட்ட அமைப்பான ஷரியா சட்டத்தின் கடுமையான கட்டுப்பாடுகளையே விரும்புகின்றனர்.

இதற்கமைய பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகளையும் அதிகரித்து வருகின்றனர்.பெண்கள் விவகார அமைச்சை மூடிவிட்டு அதற்கு பதிலாக கடுமையான மத கோட்பாடுகளை அமுல்படுத்திய துறையாக மாற்றியுள்ளனர்.

இந்த வார இறுதியில் உயர் நிலை கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன.ஆனால் சிறுவர்கள் மற்றும் ஆண் ஆசிரியர்கள் மட்டுமே மீண்டும் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பெண்களுக்கான பாடசாலைகளை மீண்டும் திறப்பதில் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக லிபான்கள் கூறியுள்ளனர்.

1990 களில் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் ஆட்சி செய்த போது பெண்களுக்கு கல்வி மற்றும் தொழில் செய்வது தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.