June 15, 2025 10:46:29

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காபூல் நகருக்குள் அனைத்து பக்கங்களில் இருந்தும் தாலிபான்கள் நுழைந்தனர்

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் நகருக்குள் தாலிபான்கள் நுழைந்துள்ளனர்.

நாட்டின் முக்கிய நகரங்களை கைப்பற்றி வரும் தாலிபான்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அனைத்து பக்கங்களில் இருந்தும் காபூல் நகருக்குள் நுழைவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

காபூலுக்குள் தாலிபான்கள் நுழையும் போது, ஆப்கான் படையினர் அங்கிருந்து விலகிச் சென்றுள்ளனர்.

இதேவேளை காபூலில் வன்முறைகளில் ஈடுபட வேண்டாமெனவும், அங்கிருந்து வெளியேற விரும்புவோருக்கு  இடமளிக்குமாறு தமது போராளிகளை தாலிபான் தலைவர் ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க தலைமையிலான மேற்குலக படைகள் வெளியேறி வரும் நிலையில், ஆப்கான் படையினருக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள தாலிபான்கள், அங்குள் நகரங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

அந்த வகையில் சில தினங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானின் 2 ஆவது பெரிய நகரான காந்தகாரை அவர்கள் கைப்பற்றினர்.

அதனை தொடர்ந்து அனைத்து பக்கங்களிலும் இருந்து முன்னேறிய தாலிபான்கள் தலைநகரை தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.