July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹெய்டி நிலநடுக்கம்: 300 ற்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

கரீபியன் நாடான ஹெய்டியில் சனிக்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 300ற்கும் மேற்பட்டொர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் அறிக்கைப்படி, 7.2 ரிக்டர் அளவிலான குறித்த நிலநடுக்கம், நாட்டின் மையப்பகுதியான செயின்ட்-லூயிஸ் டு சுட் நகரிலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் நேற்று பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கமானது கரீபியனின் பெரும்பகுதி முழுவதும் உணரப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கத்தால் இதுவரையில் 304 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்கு வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பல தரைமட்டமாகியுள்ள நிலையில் அதற்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.

மீட்புக் குழுவினர் தொடர்ந்தும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

2010 ஆம் ஆண்டில் ஹெய்டியில் ஏற்பட்ட நிலநடுக்கம் 200,000 க்கும் அதிகமான உயிர்களை கொன்றது. இதன் போது ஏற்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார பின்னடைவிலிருந்து நாடு இன்னும் மீண்டு வருகின்றது.

கடந்த மாதம் ஹெய்டி நாட்டின் ஜனாதிபதி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் சனிக்கிழமை ஏற்பட்டுள்ள நில நடுக்கம் மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றாக நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.