நகர்னோ கரபாக் தொடர்பாக ஆர்மேனியாவிற்கும் அஜர்பைஜானிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள கடும் மோதலை முடிவிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள அமெரிக்கா, இரு தரப்புடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளது.
வெள்ளிக்கிழமை அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோவுடன் தமது வெளிவிவகார அமைச்சர்கள் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளனர் என ஆர்மேனியாவும் அஜர்பைஜானும் தெரிவித்துள்ளன.
அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இது குறித்து கருத்துக்கள் எதனையும் வெளியிடாத போதிலும் டிரம்ப் நிர்வாகம் ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர் மோதலை முடிவிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துகின்றது என்பதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன.
இவ்விரு நாடுகளுக்குமிடையில் ஏற்பட்டுள்ள மோதலை முடிவிற்கு கொண்டுவருவதற்கு ரஷ்யாவே முயற்சிகளை இதுவரை மேற்கொண்டிருந்த போதிலும் அந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.