June 15, 2025 11:08:21

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிரேக்க தீவில் ஆறாவது நாளாக தொடரும் காட்டு தீ; 2000 க்கும் அதிகமானோர் இடம்பெயர்வு!

கிரேக்க தீவான ஈவியாவில் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை ஆறாவது நாளாக பரவி வரும் காட்டுத் தீ காரணமாக அங்கு வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

தீவிலிருந்து வயதானவர்கள் உட்பட பெரும்பாலான மக்கள் படகுகளின் மூலம் தப்பிச் சென்றுள்ளளர்.இதுவரை 2,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கிரீஸ்ஸில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்வடைந்த வெப்பத்தை 45C (113F) காட்டுத் தீயை ஏற்படுத்த காரணமாகியுள்ளது. தீவின் பல பகுதிகள் ஏற்கனவே கொடூரமான காட்டுத் தீயினால் அழிக்கப்பட்டு விட்டன.

தீ பரவலை கட்டுப்படுத்த அனுப்பப்பட்ட உதவிகள் போதுமானதாக இல்லை என உள்ளூர் அதிகாரிகள் பி.பி.சி.யிடம் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களாக கிரிஸ் நாட்டில் பல காடுகள் இவ்வாறு தீ பரவலை எதிர்கொண்டுள்ளன.

ஏதென்ஸின் பெரிய தீவான ஈவியாவில், ஏற்பட்டுள்ள இந்த தீ பரவல் பல வீடுகள் மற்றும் வணிக கட்டிடங்களுடன் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்களை அழித்துள்ளன.

தீயை கட்டுப்படுத்த கிரீஸ் இராணுவத்தை நியமித்துள்ளது.பிரான்ஸ், எகிப்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளும் தீயணைப்பு விமானங்கள் உட்பட உதவிகளை அனுப்பியுள்ளன.

எவியாவில் 570 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மனிதனின் செயற்பாடுகளினால் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக உலகின் பல பகுதிகளில் தாக்கம் செலுத்தும் வறண்ட வானிலை காட்டுத்தீயை ஏற்படுத்தி வருகின்றது.