July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தாலிபான் இலக்குகள் மீது அமெரிக்கா தொடர்ந்தும் வான்வழி தாக்குதல்களை நடத்தும்’

ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் இலக்குகள் மீது அமெரிக்கா தொடர்ந்தும் வான்வழி தாக்குதல்களை நடத்தும் என்று அமெரிக்க கட்டளைத் தளபதி ஜெனரல் ப்ரேங்க் மெக்கென்ஸி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மத்திய கிழக்கு இராணுவ நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஜெனரல் ப்ரேங்க் மெக்கென்ஸி, ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கனியிடம் இவ்வாறு அறிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான சர்வதேச படைகள் ஒதுங்கிக்கொண்டதைத் தொடர்ந்து, அங்கு தாலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் நிலப்பரப்பின் அரைவாசியைக் கைப்பற்றியுள்ளதுடன் தாலிபான்களின் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆப்கான் படையினர் தடுமாறுகின்றனர்.

இந்நிலையில், ஆப்கான் படைகளுக்கு வான் தாக்குதல்கள் மூலம் அமெரிக்கா ஒத்துழைக்கும் என்று ஜெனரல் ப்ரேங்க் மெக்கென்ஸி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க படைகள் ஆப்கானில் இருந்து விலகிக்கொள்ளும் இறுதித் திகதியாக ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி இருக்கும் நிலையில், அதன் பின்னர் அமெரிக்கா எவ்வாறு ஒத்துழைகும் என்பது சந்தேகமாகவே உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆப்கானிஸ்தான் படையினருக்கு பாதுகாப்பு ஆலோசனைகள் மற்றும் உளவுத்துறைத் தகவல்களை தாம் தொடர்ந்தும் வழங்கவுள்ளதாக அமெரிக்காவின் மத்திய கிழக்கு இராணுவ நடவடிக்கைகளுக்கான பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.