July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”கொரோனாவுக்கு எதிரான 2-வது தடுப்பூசி தயார்” – ரஷ்யா அறிவிப்பு

Photo:WHO/Ploy Phutpheng

கொரோனா வைரசுக்கு எதிரான 2 -வது தடுப்பூசியை தயார் செய்துவிட்டதாகவும், இனி அடுத்ததாக 3-வது தடுப்பூசியையும் கூடிய விரைவில் உருவாக்கிவிடுவோம் என்றும் ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு எதிராக பல்வேறு உலக நாடுகள் தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதில் பல நாடுகள் கணிசமான வெற்றியையும் பெற்று தடுப்பூசி தயாரிப்பின் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

இதற்கிடையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ம் திகதி உலகிலேயே முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி, பதிவு செய்து விட்டதாக ரஷ்யா ஜனாதிபதி புடின் அதிரடியாக அறிவித்தார்.

‘ஸ்புட்னிக் 5’ என பெயரிடப்பட்டுள்ள அந்த தடுப்பூசி தற்போது ரஷியாவில் மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளும் இந்த ‘ஸ்புட்னிக் 5’ தடுப்பூசியை பரிசோதனை செய்துவருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரசுக்கு எதிராக இரண்டாவது தடுப்பூசியையும் உருவாக்கிவிட்டதாக ரஷிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எபிவேக்கொரோனா என என பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி சைபீரியாவில் உள்ள வெக்டர் இன்ஸ்டிடியூட் என்ற மருந்து நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி தற்போது அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் இன்னும் தொடங்கவில்லை. மேலும், முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் நிறைவடைந்த போதும் அதன் முடிவுகள் வெளியிடப்படவில்லை.

இந்த தடுப்பூசியின் 3-ம் கட்டபரிசோதனை நவம்பர் மாதம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையில் 40 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுவிட்டதால் 3-ம் கட்ட பரிசோதனை முழுமையடைவதற்கு முன்னதாகவே எபிவேக்கொரோனா மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.