May 23, 2025 16:40:55

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை,இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளுக்கான பயணத்தடையை நீடித்தது பிலிப்பைன்ஸ்!

(file photo: Facebook/ Mactan-Cebu International Airport Authority)

இலங்கை, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் தமது நாட்டுக்கு வருவதற்கான தடையை ஜூன் 30 ஆம் திகதி வரை பிலிப்பைன்ஸ் நீடித்துள்ளது.

இந்தியாவில் பரவும் புதிய வகை கொரோனா அச்சுறுத்தலை கருத்திற்கொண்டு, பிலிப்பைன்ஸ் அரசாங்கம் மே மாதம் 7 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் வகையில் குறித்த நாடுகளுக்கு மே 6 ஆம் திகதி பயணத் தடையை அறிவித்தது.

இந்நிலையில் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டூர்ட்டே தீவிரமான பரவல் அடையும் புதியவகை கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் பயண கட்டுப்பாடுகளை நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளார்.

ஏப்ரல் 29 முதல் இந்தியா மீது பிலிப்பைன்ஸ் பயணக் கட்டுப்பாடுகளை விதித்தது. மே 7 முதல் இலங்கை, நேபாளம், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு பயணத்தடை விரிவுபடுத்தப்பட்டது.

மே 15 முதல் ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளையும் பிலிப்பைன்ஸ் பயணத்தடை பட்டியலில் சேர்த்தது.

பிலிப்பைன்ஸில் திங்களன்று பதிவான தரவுகளின் படி, 1,322,053 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 22,845 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.