சர்வதேச அங்கீகாரம் பெற்ற பலஸ்தீன தரப்புக்கு தாம் மனிதாபிமான உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே, பைடன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனுக்கு இடையே 11 நாட்களாக நீடித்த மோதல் நேற்றுடன் நிறைவுக்கு வந்தது.
இரு தரப்புக்கும் இடையேயான போர் நிறுத்தம் நிலைக்க வேண்டும் என்று தாம் பிரார்த்திப்பதாகவும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
பலஸ்தீனின் காஸாவுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க சர்வதேச அங்கீகாரம் பெற்ற பலஸ்தீன தரப்புடன் அமெரிக்க செயற்பட தயாராக இருப்பதாகவும் ஹமாஸ் அமைப்புடன் தாம் செயற்பட தயாரில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபை காஸா பகுதிக்கான உணவு மற்றும் தடுப்பூசிகள் உட்பட மருத்துவ வசதிகளை அனுப்பி வைத்துள்ளது.
இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பைப் பலப்படுத்துவதற்கு தாம் உதவவுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.