July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சட்டவிரோதமாக நுழையும் புகலிடக் கோரிக்கையாளர்களை வேறு நாட்டில் வைத்து விசாரிக்க பிரிட்டன் திட்டம்

பிரிட்டனுக்குள் சட்டவிரோதமான வழிகளில் நுழையும் புகலிடக் கோரிக்கையாளர்களை அவர்களின் கோரிக்கை தொடர்பான விசாரணைகள் முடியும் வரை வேறொரு நாட்டுக்கு அனுப்புவதற்கு பிரிட்டனின் உள்துறை அலுவலகம் பரிசீலித்து வருவதாக தெரியவருகின்றது.

அவுஸ்திரேலியாவின் சர்ச்சைக்குரிய நடைமுறையை ஒத்ததாக அமையக்கூடிய இந்தத் திட்டம் பற்றிய விபரங்களை பிரிட்டனின் உள்துறைச் செயலாளர் பிரீத்தி பட்டேல் அடுத்த வாரம் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2020 இன் இறுதி வரை ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கமாக புகலிடக் கோரிக்கைகளை விசாரித்து வந்த பிரிட்டன் இப்போது புதிய நடைமுறை குறித்து கவனம் செலுத்தியுள்ளது.

இதுவரையில், ஐரோப்பிய ஒன்றிய நாடு வழியாக பிரிட்டனுக்குள் சட்டவிரோதமாக நுழைவோரை, விசாரணைகளுக்காக அந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கக்கூடிய ஏற்பாடு பிரிட்டனின் குடியேற்ற சட்ட விதிகளின் கீழ் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

இனி, சட்டவிரோதமாக பிரிட்டனுக்குள் நுழைவோரை மூன்றாவது நாடொன்றுக்கு அனுப்புவதற்கு பிரிட்டன் திட்டமிட்டு வருகின்றது.

இதன்படி, சிறிய படகுகளில் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு பிரிட்டனுக்குள் நுழையும் புகலிட கோரிக்கைகயாளர்கள் விசாரணைகள் முடியும்வரை ஒரு தனித் தீவிலோ, தொலைதூர தேசம் ஒன்றிலோ தங்கவைக்கப்படலாம்; துருக்கி போன்ற நாடுகளுக்கோ, ஜிப்ரால்டர், ஐல் ஆஃப் மேன் அல்லது பிற பிரிட்டிஷ் தீவுகளுக்கோ  புகலிடம் கோருவோர் அனுப்பப்படலாம்

“மக்கள் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு உயிரிழப்பதை பார்த்துக்கொண்டு நாம் பொறுப்பற்றவர்களாக இருக்கமுடியாது” என்று பிரிட்டன் அரசு கூறுகின்றது.

எனினும் இந்த நடைமுறை “மனிதாபிமானமற்றது, முற்றிலும் நடைமுறைக்கு ஒவ்வாததும் மிகவும் செலவு கூடியதும்” என பிரிட்டனின் எதிர்க்கட்சியான தொழிற்கட்சி விமர்சித்துள்ளது.

இவ்வாறான நடைமுறைகள் மூலம், புகலிடம் கோருவோரின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியில் பிரிட்டன் இறங்கியுள்ளதாக அவதானிகள் கூறுகின்றனர்.