October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வுகானில் விசாரணைகளை ஆரம்பித்தனர் உலக சுகாதார ஸ்தாபனத்தின் குழுவினர்

கொரோனா வைரஸின் ஆரம்பம் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் 14 நாள் தனிமைப்படுத்தலிற்கு பின்னர் தமது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் குழுவினர் வுகானிற்கு சென்றுள்ளனர்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் விஞ்ஞானிகள் ஆராய்ச்சியாளர்களை சந்திக்கவுள்ளதுடன், மருத்துவமனைகளுக்கும் வுகானின் சந்தைக்கும் செல்லவுள்ளனர்.

சீன அதிகாரிகள் வழங்கிய ஆதாரங்களை அடிப்படையாக வைத்தே அவர்கள் தங்கள் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

வியாழக்கிழமை உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் குழுவினர் தங்கள் ஹோட்டல்களில் இருந்து வெளியேறி பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளனர்.

முன்னதாக அவர்கள் தங்களின் தனிமைப்படுத்தல் முடிவிற்கு வருவது குறித்த டுவிட்டர் செய்தியை வெளியிட்டிருந்தனர்.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சிலர் உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்களை சந்திப்பதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளனர்.

கடந்த வருடம் பெப்ரவரியில் தனது தந்தையை பறிகொடுத்த ஜாங்ஹாய் என்பவர் உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்களை சந்திப்பதற்கும் அவர்களுடைய விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதற்கும் தயாராகவுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.