May 30, 2025 18:25:33

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டோக்கியோ ஒலிம்பிக்கை ரத்துச் செய்ய ஆலோசனை?

டோக்கியோ ஒலிம்பிக் விழாவை ரத்துச்செய்வதற்கு ஜப்பான் ஒலிம்பிக் அதிகாரிகள் ஆலோசித்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒலிம்பிக் விழா கடந்த வருடம் ஜூன் மாதத்தில் ஜப்பானில் நடைபெறவிருந்தது. எனினும், உலகை ஆட்டிப்படைத்த கொரோனா தொற்று காரணமாக ஒலிம்பிக் விழா இவ்வருடம் ஜூலை மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

எதிர்வரும் ஜூலை 23 ஆம் திகதி ஒலிம்பிக் விழாவை டோக்கியோவில் ஆரம்பிப்பது என்றும் ஓகஸ்ட் 24 ஆம் திகதி பராலிம்பிக்கை ஆரம்பிப்பது எனவும் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனாலும், இவ்வருடம் ஜப்பானில் கொரோனாவின் தாக்கம் அபாயகரமாகியுள்ளது.

ஜப்பானில் தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதுடன், அங்கு பயணக்கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வெளிநாட்டவர்கள் ஜப்பானுக்கு விஜயம் செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வரும் கோடைகாலத்தில் ஒலிம்பிக் விழா நடத்தப்படுவதை ஜப்பான் மக்கள் விரும்பவில்லை என சமீபத்திய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே ஒலிம்பிக் விழாவை ரத்துச் செய்வது பற்றி ஜப்பான் அரசாங்கம் ஆலோசித்துவருகிறது.

எவ்வாறாயினும் இது பற்றிய இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்ட பின்னர் அது ஜப்பான் ஒலிம்பிக் அதிகாரிகளால் சர்வதேச ஒலிம்பிக் குழுவுக்கு அறிவிக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்ட பின்பே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

1930 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட நவீன ஒலிம்பிக் விழா முதலாம், இரண்டாம் உலகப் போர் மூண்ட காலப்பகுதியில் மாத்திரம் தடைப்பட்டுள்ளதுடன், அதன் பிறகு தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்துள்ளது. இந்தமுறை கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் ஒலிம்பிக் விழா ரத்துச்செய்யப்படும் அபாயம் உருவாகியுள்ளது.