June 1, 2025 1:50:28

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈரான் ஆளில்லா விமானங்களை முதல் தடவையாக காட்சிப்படுத்தியுள்ளது!

ஈரான் முதல்தடவையாக தமது நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்களை காட்சிப்படுத்தியுள்ளது.

செம்னான் பிராந்தியத்தில் நடைபெற்ற இரண்டு நாள் பயிற்சிகளின் போதே ஈரான் நூற்றிற்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை காட்சிப்படுத்தியுள்ளதுடன் சோதனை செய்துள்ளது.

இவ் பயிற்சிகளின் போது வான்வெளியில் இலக்குவைத்தல், குண்டுகளையும் ஏவுகணைகளையும் பயன்படுத்தி இலக்குகளை அளித்தல் போன்ற தாக்குதல் வழிமுறைகள் குறித்து ஈரான் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.

இதன் போது ஈரானின் வடபகுதி கடற்பரப்பில் காணப்படும் கடற்படை தளங்கள் மீது ஆளில்லா விமானங்களை செலுத்தும் சோதனைகளும் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்வதற்கு தாங்கள் தயார் என்பதை எமது படையினர் நிரூபிப்பார்கள் என ஈரானிய இராணுவத் தலைவர் மேஜர் ஜெனரல் முகமது பகேரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஈரான், அமெரிக்காவின் தடைகளையும் மீறி இந்த ஆளில்லா விமானங்களை தயாரித்துள்ளது.

ஈரானின் உயர்மட்ட தளபதி குவாசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் அமெரிக்காவை எச்சரிக்கும் விதமாக ஈரான் தனது இராணுவத்தை பலப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.