June 11, 2025 21:46:06

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தென்கொரியாவின் எண்ணெய் கப்பலை கைப்பற்றியது ஈரான்!

ஈரானின் புரட்சிகர கடற்படையினர் வளைகுடா கடற்பரப்பில் வைத்து தென்கொரியாவின் எண்ணெய் கப்பலை கைப்பற்றியுள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதனை தென்கொரியா அரசு உறுதி செய்துள்ளது.

இன்று திங்கட்கிழமை “கடல்சார் சுற்றுச்சூழல் சட்டங்களை” மீறியதையடுத்து இவ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஈரானின் புரட்சிகர கடற்படை தெரிவித்துள்ளது.

தென் கொரிய கொடியிடப்பட்ட குறித்த கப்பல் ஹான்குக் செமி என அடையாளம் கணப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் அல் ஜுபைல் துறைமுகத்திலிருந்து ஐக்கிய அரபு இராச்சியத்தின் புஜைராவுக்கு பயணித்து கொண்டிருந்த போது வளைகுடா கடற்பரப்பின் ஹார்முஸ் ஜலசந்தியில் வைத்து இக் கப்பல் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த கப்பல் தற்போது பண்டார் அபாஸ் துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் கப்பலில் இருந்த தென்கொரியா, வியட்நாம், இந்தோனேசியா, மியன்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 20 பேரை ஈரானின் புரட்சிகர கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் கப்பலையும் கைதுசெய்யப்பட்டவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தென்கொரியா வேண்டுகோள் விடுத்துள்ளது.