June 12, 2025 16:53:30

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புதியவகை கொரோனாவினால் தென்னாசியாவிலும் பலர் பாதிப்பு

பிரிட்டனில் முதன்முதலில் பரவத்தொடங்கிய வீரியம்மிகுந்த புதியவகை கொரோனா வைரஸ் தென்னாசியாவில் பரவத்தொடங்கியுள்ளது.

பாகிஸ்தானிலும் இந்தியாவிலும் புதியவகை கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் புதியவகை கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மூன்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் பிரிட்டனில் இருந்து வந்தவர்கள் என பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் கராச்சி நகரிலேயே புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவிலிருந்து பாகிஸ்தான் திரும்பிய 12 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது ஆறுபேர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதும் மூவர் புதியவகை கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமையும் உறுதியாகியுள்ளது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்தியா புதியவகை வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள ஆறுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் இங்கிலாந்திலிருந்து வந்தவர்கள் என்றும் அவர்களுடன் வந்த ஏனையவர்களை தேடி வருகின்றோம் என்றும் தெரிவித்துள்ள அதிகாரிகள் நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.