
பிரான்ஸில் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
எவ்வித நோய் அறிகுறிகளும் இல்லாத நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவரை சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 19 ஆம் திகதி லண்டனில் இருந்து நாடு திரும்பிய நபர் ஒருவருக்கே இவ்வாறு புதியவகை வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அதிக வீரியத்துடன் வேகமாக பரவக்கூடிய புதியவகை கொரோனா வைரஸ் பிரித்தானியாவிலேயே முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட புதியவகை கொரோனா வைரஸ் தென் ஆபிரிக்கா, டென்மார்க், அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இதனை தொடர்ந்து, பல நாடுகள் பிரித்தானியாவுக்கான விமான சேவைகளையும் தற்காலிகமாக இடைநிறுத்திக்கொண்டுள்ளன.
பிரான்ஸ் கடந்த புதன்கிழமை சில கட்டுப்பாடுகளுடன் பயணத் தடையை தளர்த்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.