July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘புகலிடக் கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்துகின்றது பிரிட்டன்’

பிரெக்சிட்டிற்கு முன்பாக புகலிடக் கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் நடவடிக்கைகளை பிரிட்டன் தீவிரப்படுத்துகின்றது.

ஆள்கடத்தலிற்கு உள்ளானவர்கள் உட்பட பல புகலிடக்கோரிக்கையாளர்களை அவர்களின் நாடுகளிற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையை பிரிட்டன் இந்த வாரம் முன்னெடுக்கவுள்ளது என கார்டியன் தெரிவித்துள்ளது.

பிரெக்சிட்டிற்கு முன்பாக உள்துறை அமைச்சர் நாடுகடத்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துகின்றார் என கார்டியன் தெரிவித்துள்ளது.

ஜேர்மனி, பிரான்ஸ் உட்பட பல நாடுகளிற்கான விமான சேவைகளுக்கு திட்டமிட்டுள்ளதாக கார்டியன் தெரிவித்துள்ளது.

ஆள்கடத்தல் மற்றும் சித்திரவதைக்குள்ளானவர்களை உரிய மதிப்பீடுகளை மேற்கொள்ளாமல் நாடு கடத்துவதற்கு உள்துறை அமைச்சு தயாராகின்றது என தெரிவித்துள்ள மனித உரிமை அமைப்புகள், இது சட்டவிரோதமான நடவடிக்கை. சமீபத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவினை மீறுகின்ற செயல் என தெரிவித்துள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் டப்பிளின் மாநாட்டு சட்டத்தின் அடிப்படையில் இந்த விமானங்கள் சேவையில் ஈடுபட்டுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் டப்பிளின் மாநாட்டு சட்டம் புகலிடக்கோரிக்கையாளர்களை அவர்கள் முதன்முதலில் புகலிடக்கோரிக்கைக்கு விண்ணப்பித்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிற்கு திருப்பி அனுப்புவதற்கு அனுமதித்துள்ளது.

பிரெக்சிட்டின் நிலைமாற்றுக்காலத்தில் இந்த சட்டத்தை பின்பற்றுவதற்கு பிரிட்டனிற்கு அனுமதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த வாரம் விமானங்கள் மூலம் அனுப்பப்படவுள்ளவர்களின் சட்டதரணிகள் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
ஏன் நீங்கள் இங்கு வந்தீர்கள்?,பிரித்தானியாவிற்கான உங்கள் பயணம் குறித்து தெரிவியுங்கள் என்ற கேள்வி மாத்திரம் புகலிடக்கோரிக்கையாளர்களிடம் கேட்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.