October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“இலங்கையில் இன அழிப்பைத் தடுக்க ஐநா தவறிவிட்டது”: பராக் ஒபாமா

“இலங்கை போன்ற நாடுகளில் இன- அழிப்பைத் தடுக்க ஐக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது என்று அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா குற்றஞ்சாட்டியுள்ளார்.

‘உறுதியளிக்கப்பட்ட நிலம்’ (A Promised Land) என்னும் தனது நினைவுத் தொகுப்பு நூலில் ஐநாவின் கையாலாகாத் தனத்தை இவ்வாறு பதிவு செய்துள்ளார் பராக் ஒபாமா.

“சோமாலியா போன்ற தோல்வி கண்ட அரசுகளை மீளக்கட்டியமைப்பதற்கோ அல்லது இலங்கை போன்ற நாடுகளில் இன அழிப்புகளை தடுப்பதற்கோ ஐநாவின் உறுப்பு நாடுகளிடையே வழிமுறைகளோ கூட்டு விருப்பமோ இருக்கவில்லை” என்று ஒபாமா அந்த நூலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘இன- அழிப்பை’ ஒபாமா ‘ethnic slaughter’ என்ற ஆங்கில வார்த்தையிலேயே ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.

உலக நெருக்கடிகளின்போது ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகள், தீர்மானங்கள் குறித்து விவரிக்கும் அத்தியாயங்களில் இலங்கைத் தமிழர்களின் படுகொலைகளை ஒபாமா சுட்டிக்காட்டியிருப்பது உலக அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

தனது பதவிக் காலத்தின் முதல் ஐந்து ஆண்டுகால அனுபவங்களை விவரிக்கும் அவரது நூலின் 768 பக்கங்கள் கொண்ட முதற்பாகம் ஆங்கிலத்திலும் வேறு 24 மொழிகளிலும் அச்சிடப்பட்டு கடந்த செவ்வாயன்று வெளியாகியது.

சமகால உலகத் தலைவர்கள் பற்றிய தனது எண்ணங்கள், தனது பதவிக்காலத்தில் பூகோள அரசியல் குறித்து எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள், சொந்த வாழ்க்கைப் பின்னணி எனப் பல தகவல்களை உள்ளடக்கிய அந்த நூலில், தென்னாசிய அரசியல் மையமான இலங்கை குறித்தும் அதன் இறுதிப் போர் பற்றியும் ஒபாமா என்ன கூறப்போகிறார் என்று நூல் வெளியாகுவதற்கு முன்பிருந்தே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.