
சிரியாவின் செயற்பாடுகளுக்கு தொடர்ந்தும் இஸ்ரேல் பாதிப்பை ஏற்படுத்த முயற்சித்தால் அந்த முயற்சிகள் அனைத்தும் தோற்கடிக்கப்படும் என ஈரானின் வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சயீத் காதிப்சாதே தெரிவித்துள்ளார்.
வாராந்த செய்தியாளர் மாநாட்டிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்;
“சியோனிஸ்ட் ஆட்சியாளர்களுக்கு மறைந்திருந்து “தாக்கிவிட்டு ஒடும்” நிலைமை முடிவுக்கு வந்துவிட்டது. இதன் காரணமாக அவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கின்றார்கள்.
ஈரான், சிரியாவில் ஒரு ஆலோசகர் என்ற அடிப்படையிலேயே பிரசன்னமாகியுள்ளது. இந்த செயற்பாட்டை யாராவது குழப்பினால் எங்கள் பதில் நடவடிக்கை மிகவும் கடினமாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் பாதுகாப்புப் படையினரிடமிருந்து தாக்குதல் தொடர்பில் எந்தக் கருத்துக்களும் வரவில்லை. பொதுவாக ஈரானுக்கும் சிரியாவில் அதன் பிரதிநிதிகளுக்கும் எதிரான இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் நடவடிக்கைகள் குறித்து தெளிவற்ற கொள்கையை பராமரிக்கிறது. அதன் நடவடிக்கைகளையும் பகிரங்கமாக ஒப்புக்கொள்ள மறுக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
சிரியாவில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக கூறி அந்த நாட்டின் மீது இஸ்ரேல் தொடர்ந்து, வான்தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால் இதனை திட்டவட்டமாக மறுக்கும் சிரியா தங்களின் இராணுவ நிலைகளை குறிவைத்தே இஸ்ரேல் வான்தாக்குதல்களை நடத்துவதாக கூறுகிறது.
சிரியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் இடம்பெற்று வருகின்றது. மேலும் இரு நாட்டு எல்லைப்பகுதியில் ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற சிரிய கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஈரானின் புரட்சிப்படை பிரிவினர் பலரும் மறைந்துள்ளனர்.
இவர்கள் சிரியாவில் இருந்தவாறு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்களை அழிக்க இஸ்ரேல் இராணுவம் சிரியாவில் அவ்வப்போது விமானப்படைகள் மூலம் தாக்குதல் நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.