July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தர பதவி விலகவுள்ளதாக தகவல்!

ஜனாதிபதி செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர தனது பதவியில் இருந்து விலகத் தயாராகி வருவதாக கொழுப்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அரசாங்கம் எதிர்கொண்டுள்ள நெருக்கடியான நிலைமைக்கு ஜனாதிபதி செயலாளரின் சில தீர்மானங்கள் காரணமாக இருந்ததாக அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையிலேயே அவர் பதவி விலகவுள்ளதாக கூறப்படுகின்றது.

அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ, அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் முன்னிலையில், ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவிற்கு எதிராக கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாகவும் கொழும்பு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதனிடையே, இந்தியாவிலிருந்து பசளைக் கொள்வனவு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பிலும் இவர் மீது பாராளுமன்ற உறுப்பினர்கள்  குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில் ஜனாதிபதி செயலாளரின் பதவி விலகும் முடிவுக்கு இவையும் காரணமாக இருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், ஜனாதிபதி தற்போது வெளிநாட்டு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் ஜனாதிபதியின் செயலாளரின் பதவி விலகல் திடீரென இடம்பெறாது என ஜனாதிபதி செயலகத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.

இதேவேளை, கலாநிதி பி.பீ.ஜயசுந்த பதவி விலகினால் அந்த இடத்திற்கு நீர்ப்பாசன அமைச்சின் செயலாளராக தற்போது கடமையாற்றும் டி.எம்.அநுர திஸாநாயக்க நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.