October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை விமானப்படையில் முதன்முறையாக இரு பெண் விமானிகள்

Photo: airforce.lk

இலங்கை விமானப்படையில் இரு பெண் அதிகாரிகள் விமானிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை விமானப்படை வரலாற்றில் முதன்முறையாக இரண்டு பெண் விமானிகளுக்கு, விமானத்தை செலுத்துவதற்கான உத்தியோகப்பூர்வ சின்னம் இன்று அணிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை விமானப் படையின் ஏ.டி.பி.எல். குணரத்ன மற்றும் ஆர்.டி வீரவர்தன ஆகிய பெண் அதிகாரிகளே இவ்வாறு விமானிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை, சீனக்குடா விமானப்படை பயிற்சி நிலையத்தில் இன்று நடைபெற்ற 61 ஆவது அதிகாரிகளின் கேடட் கமிஷனிங் மற்றும் விங்ஸ் அணிவகுப்பின் போது, இந்த அதிகாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டதாக இலங்கை விமானப்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வு, பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரண ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

புதிய பெண் விமானிகளாக நியமிக்கப்பட்டுள்ள இருவரும், சிறிய ரக விமானங்களை செலுத்துவதற்காக விமானப்படை தலைமையகத்துக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.