October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இந்திய- இலங்கை அமைதி ஒப்பந்தத்தை இலங்கை மீறுகிறது’

இந்திய- இலங்கை அமைதி ஒப்பந்தத்தை, இலங்கை மீறுவதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் இணைப்பாளர் கோ. ராஜ்குமார் தெரிவித்தார்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தினர் ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் கூறுகையில்,

1987ஆம் ஆண்டு ஜுலை மாதம் 29 ஆம் திகதி அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனவுக்கும் இடையே  ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்டது தான் இந்திய- இலங்கை ஒப்பந்தம்.

இந்த அமைதி ஒப்பந்தத்தின்படி, நிலத்தை விநியோகிக்கும் அதிகாரம் வட மாகாணத்திற்கு மட்டுமே உள்ளது. வட மாகாணத்திலிருந்து எந்த நிலங்களையும் விநியோகிக்க இலங்கை அரசாங்கத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை. இது சர்வதேச ஒப்பந்தத்தின் மொத்த மீறலாகும்.

மேலும் தமிழரின் விருப்பத்திற்கு எதிராக எதைச் செய்தாலும் அது சர்வதேச சமூகத்தால் மாற்றப்படும். அதேவேளை இலங்கை பல ஆக்கபூர்வமான விடயங்களைச் செய்ய புவி-அரசியல் அழுத்தத்தில் உள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் மற்றும் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் பலர், விவசாயம் செய்யவோ, வீடு கட்டவோ எந்த நிலமும் இல்லாமல் தவிக்கிறார்கள்.

ஏனென்றால் இலங்கை இராணுவத்தால் பல தமிழரின் நிலங்கள் சூறையாடப்பட்டுள்ளன.

எனவே, அமெரிக்கா மற்றும் இந்தியா தமிழர்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் வரை அரசாங்கம் காத்திருக்க வேண்டியது நல்லது என்று அவர் மேலும் தெரிவித்தார்.