June 2, 2025 10:23:35

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் ஏற்பட்ட கைகலப்பில் இருவர் வெட்டிக் கொலை

சுழிபுரம் மத்தி, குடாக்கனை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை பின்னிரவு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு பின்னர் கைகலப்பாக மாறியதால் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்று வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன், மற்றையவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படும் போது உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்தில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதேவேளை, சம்பவத்தையடுத்து அந்தப் பகுதியில் உறவினர்களுக்கு இடையே மோதல் உருவாகும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அதே இடத்தைச் சேர்ந்த 56 மற்றும் 31 ஆகிய வயதுகள் நிரம்ம்பிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.

இன்று மாலையிலிருந்து முறுகல் நிலை காணப்பட்ட நிலையில்,அதுதொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டது. எனினும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வரவில்லை என்று அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவித்தனர்.

அதனால் ஒரு பகுதியினர் வாள்களுடன் மற்றைய பகுதியினரின் வீட்டுக்குள் பின்னிரவில் புகுந்து சரமாரியாக தாக்குதல் நடத்தியதால் இருவர் உயிரிழந்துள்ளனர் அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்.