June 13, 2025 11:32:12

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சஹ்ரானின் மனைவி உட்பட ஐவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

இலங்கையில் கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்களின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமின் மனைவி உள்ளிட்ட ஐவரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

சஹ்ரானின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா ஹாதியா உள்ளிட்ட 5 சந்தேக நபர்களையும் நவம்பர் 25 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியல் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களையடுத்து அம்பாறை சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களின் பின்னர், சஹ்ரானின் மனைவி உள்ளிட்ட ஐவர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் குற்றப் புலானாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

அத்துடன், மேற்படி ஐவரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் கடந்த மாதம் ஆஜர்படுத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.