October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிள்ளையான் மீதான வழக்கு ஒத்திவைப்பு

பிள்ளையான்

நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு இம்மாதம் 24 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் மீதான வழக்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதவான் டி.சூசைதாசன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, எதிர்வரும் 24 ஆம் திகதி வரை வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதவான் டி.சூசைதாசன் அறிவித்துள்ளார்.

அதேவேளை, மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு அனுமதிக்க வேண்டாமென அரச தரப்பு சட்டத்தரணியால் முன்வைக்கப்பட்ட வாதம் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், சிறைச்சாலை ஆணையாளர் அனுமதி வழங்கினால் மாத்திரம் நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியுமெனவும் நீதவான் அறிவித்துள்ளார்.

2005 ஆம் ஆண்டு நத்தார் ஆராதனையின்போது, மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.