July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மக்களின் எதிர்ப்பால் மண்டைதீவு காணி சுவீகரிப்பு முயற்சி நிறுத்தம்

யாழ்ப்பாணம், வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மண்டைதீவு பகுதியில் பொது மக்களின் காணிகளை கடற்படையினருக்கு சுவீகரிக்கும் நடவடிக்கை, பொதுமக்களின் எதிர்ப்பினை அடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மண்டைதீவு ஜே-7 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் காணப்படும் பொதுமக்களுக்கு சொந்தமான குறித்த காணியை கடற்படையினருக்கு சுவீகரிக்கும் நோக்கில் நில அளவைத் திணைக்களத்தினால் அளக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, இன்று காலை 8.30 மணியளவில் நில அளவைத் திணைக்களத்தினர் அளவீட்டு பணிக்காக வந்திருந்தனர்.

இதன்போது அங்கு வந்த காணி உரிமையாளர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நிலஅளவையாளர் அளவீட்டை கைவிட்டு திரும்பி சென்றனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொது செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம், வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்களான கருணாகரன் நாவலன், சிறிபத்மராசா உள்ளிட்ட பலர் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.