July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘முழு நாட்டையும் உடனடியாக முடக்குங்கள்’

தேவையில்லாத காரணங்களைத் தெரிவிக்காது, முன்னறிவித்தல் வழங்கி முழு நாட்டையும் குறைந்தது 14 நாட்களுக்காவது முடக்குங்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது;

“கொரோனா வைரஸ் தொற்றின் பேராபத்து மையமாக மேல் மாகாணம் விளங்குகின்றது. இந்த நிலையில், இம்மாகாணத்தை 10 நாட்கள் மட்டும் முடக்கியிருந்த அரசு, அதை மீண்டும் திறந்துவிட்டுள்ளது.

இதனால் கொரோனாத் தொற்றுப் பரவல் நாடெங்கும் பரவும் அபாயம் உள்ளது. தொற்றாளர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனைக் கருத்தில்கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செயற்பட வேண்டும். சாக்குப்போக்குக் காரணங்களைத் தெரிவிக்காது முன்னறிவித்தல் வழங்கி முழு நாட்டையும் குறைந்தது 14 நாட்களுக்காவது முடக்கும் உத்தரவை ஜனாதிபதி வழங்க வேண்டும். அந்தக் காலப்பகுதிக்குள் நாடெங்கும் பி.சி.ஆர். பரிசோதனைகளையும் முன்னெடுக்க வேண்டும் என்று சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.