July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் இன்று நால்வர் கொரோனாவுக்கு பலி; மரண எண்ணிக்கை 34 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு, மாளிகாவத்தையைச் சேர்ந்த இருவர், கனேமுல்ல மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளில் தலா ஒருவர் என நால்வர் இன்று மரணித்துள்ளனர்.

கொழும்பு-10 மாளிகாவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணொருவர் அவரது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். இவர் நீண்ட நாட்கள் இருதய நோயால் பீடிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோல், கொழும்ப-10 மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடைய பெண் ஒருவரும் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

இவர் நீண்ட கால நோய்களினால் பீடிக்கப்பட்டிருந்ததாகவும் நோய் நிலைமை தீவிரம் அடைந்த காரணத்தினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இவரின் மரணத்திற்கான காரணம் கொரோனா தொற்றுடன் நிமோனியா ஏற்பட்டதாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், வெல்லம்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரும் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் நீண்ட நாட்கள் நோய் ஒன்றினால் பீடிக்கப்பட்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.இவருக்கு நியூமோனியா நிலை உருவானதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோல், கனேமுல்லை பிரதேசத்தை சேர்ந்த 88 வயதுடைய பெண் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

இவர் மினுவாங்கொடை தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர் என தெரிவிக்கப்படுகிறது.

தனிமைப்படுத்தப்பட்ட இவர் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நோய் தீவிரமடைந்ததால் கொழும்பு ஐ.டிஎச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.