July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெலிக்கடை சிறையில் சஹ்ரானின் மனைவி உட்பட 23 கைதிகளுக்கு கொரோனா

கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள கைதிகள் இன்று வெலிகந்த மருத்துவமனைக்கு இடமாற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளைத் தொடர்ந்து, மேலும் 23 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி அடையாளம் காணப்பட்ட 23 பேரும் பெண்கள் என்றும், அவர்களில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமின் மனைவியும் அடங்குவதாகவும் தெரியவந்துள்ளது.

இதன்படி, வெலிக்கடை சிறைச்சாலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள கைதிகளின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.

சிறைச்சாலையில் வைரஸ் தொற்று எவ்வாறு ஏற்பட்டிருக்கக்கூடும் என்பது தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் இன்று வெலிகந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் ஆணையாளர் தெரிவித்தார்.

கடந்த புதனன்று வெலிக்கடை சிறைச்சாலையினுள் இயங்கி வரும் மருத்துவ நிலைய பணியாளர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியதாகவும், அதன் மூலமே கைதிகளிடையே கொரோனா பரவியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது.