July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் எல்பிஎல் கிரிக்கெட் தொடரை நடத்த சுகாதார அமைச்சு அனுமதி

இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் இருபது – 20 கிரிக்கெட் போட்டித் தொடரை நடத்துவதற்கு சுகாதார அமைச்சு மற்றும் கொரோனா தடுப்புக்கான செயலணி  இன்று அனுமதி வழங்கியதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றின் மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சு மற்றும் கொரோனா தடுப்புக்கான செயலணி ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் இலங்கை கிரிக்கெட் சபை நடத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்தே, இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார வழிகாட்டல்களுடன் நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பே இதன் மூலம் வெளிப்படுவதாகவும், அனுமதி வழங்கப்பட்டமைக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

எல்பிஎல் போட்டிகள் அனைத்தையும் ஹம்பாந்தோட்டை சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடத்துவதற்கும், வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கான தனிமைப்படுத்தல் காலத்தை 7 நாட்களுக்கு மட்டுப்படுத்துவதற்கும் சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.