June 14, 2025 0:00:55

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

துப்பாக்கி கேட்ட அர்ச்சுனா – கொடுக்கக் கூடாது என்ற சஜித்!

தனக்கு பாதுகாப்பு தேவையென எவரேனும் எம்.பி கோரிக்கை முன்வைத்தால் அது தொடர்பில் ஆராய்வதற்காக அந்த கோரிக்கையை தேசிய பாதுகாப்பு குழுவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் ஜகத் விக்கிரமரட்ன தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது எம்.பிக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவ்வேளையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் சிலர் தமக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியதன் அவசியங்கள் குறித்து சுட்டிக்காட்டியுள்ளதுடன், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும் தனக்கு பாதுகாப்பு வழங்குவதற்குவதற்கான வசதிகள் இல்லையென்றால் தனது பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்ள தனக்கு துப்பாக்கியொன்றை வழங்குமாறும் கோரியுள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவவர், ஜனநாயகம் உள்ள நாட்டில் பாதுகாப்புக்காக துப்பாக்கி வழங்கப்படக் கூடாது என்றும், அதிகாரிகளாலேயே அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேவண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கைகள் கிடைத்த பின்னர் சில எம்.பி.க்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எம்.பி.க்களின் அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கைகளின் முன்னேற்றம் குறித்து தனக்குத் தெரிவிக்குமாறு சபாநாயகரால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த கலந்துரையாடலின் போது நாட்டின் பாதுகாப்பு நிலவரம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இவ்வேளையில் நாட்டில் இடம்பெறும் கொலை மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் போதைப் பொருள் வர்த்தகர்களிடையே இடம்பெறும் மோதல்களுடன் தொடர்புடையவை என்றும், சில சம்பவங்களில் பிரதேச அரசியல்வாதிகள் தொடர்புபட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.