September 12, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதித் தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது?

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இம்முறை தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் அவர்களில் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க மற்றும் நாமல் ராஜபக்‌ஷ ஆகியோருக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது.

இதனால் இம்முறை எந்தவொரு வேட்பாளருக்கும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்காது போகலாம்  என்பதுடன், 2 ஆம் , 3ஆம் விருப்பத் தெரிவு வாக்குகள் செல்வாக்கு செலுத்தும் வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆகவே ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் முறை மற்றும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் யாருக்கும் கிடைக்காத பட்சத்தில் 2 , 3 ஆம் விருப்பத் தெரிவு வாக்குகளை எண்ணும் போது பின்பற்றப்படும் நடைமுறைகள் தொடர்பாக வாக்காளர்கள் தெளிவை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

முதலில் வாக்களிக்கும் முறை தொடர்பாக அவதானம் செலுத்துவோமாக இருந்தால், தேர்தலில் மூன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமையினால் வேட்பாளர் ஒருவருக்கோ அல்லது மூன்று வேட்பாளர்களுக்கு முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பத் தெரிவுகளையோ வாக்குச்சீட்டில் அடையாளமிட முடியும்.

குறிப்பாக வாக்காளர் ஒருவர் ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களிக்க விரும்புவாராயின் தான் விரும்பும் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேராக உள்ள பெட்டியில் மட்டும் 1 என்ற இலக்கத்தை அல்லது X எனும் புள்ளடியை இடுவதுபொருத்தமாகும். அல்லது முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பத் தெரிவுகள் இருக்குமாயின் முதலாவது விருப்பத் தெரிவுக்குரிய வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேராக உள்ள பெட்டியினுள் 1 எனவும் இரண்டாவது விருப்பத் தெரிவுக்குரிய வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேரான பெட்டியில் 2 எனவும் மூன்றாவது விருப்பத் தெரிவுக்குரிய வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேரான பெட்டியில் 3 எனவும் அடையாளமிடுவது பொருத்தமாகும்.

இதேவேளை எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்கொன்று அடையாளமிடப்படாத அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு X என்ற அடையாளமிடப்பட்டுள்ள அல்லது ஒரு வேட்பாளருக்கு 1 எனவும் மற்றுமொரு வேட்பாளருக்கு X என்ற அடையாளமும் இடப்பட்டுள்ள அல்லது இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பத் தெரிவுகள் மாத்திரம் அடையாளமிடப்பட்டுள்ள வாக்குச்சீட்டுக்கள் செல்லுபடியற்றதானதாகும் என்பதுடன் வாக்கு எண்ணும் போது அவை நிராகரிக்கப்படும்.

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பு முறைமை இவ்வாறாக இருக்கும் நிலையில், சிலருக்கு விருப்பத் தெரிவு வாக்களிப்பு முறை தொடர்பாக குழப்பங்கள் காணப்படுகின்றன. ஏன் இந்த முறைமை காணப்படுகின்றது. அதனால் என்ன பிரயோசனம்? மற்றைய தேர்தல்களின் போது இப்படி இலக்கமிட்டு வாக்களிப்பதில்லையே என்ற கேள்விகள் அவர்களிடையே எழுகின்றன.

அதாவது ஜனாதிபதித் தேர்தல் என்பது முழு நாட்டிற்கும் ஒரு நபரை தெரிவு செய்வதற்கான தேர்தலாகவே காணப்படுகின்றது. இதனால் அவர் பெரும்பான்மையான ஆதரவை பெற்றவராக இருக்க வேண்டும். இதன்படி அந்த நபர் ஜனாதிபதியாக வேண்டுமென்றால் தேர்தலின் போது அளிக்கப்பட்டு செல்லுபடியான வாக்குகளில் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும். அதாவது குறைந்தது 50 வீத வாக்குடன் மேலதிகமாக ஒரு வாக்கை பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறான நிலைமையில் எந்தவொரு வேட்பாளருக்கும் 50 வீதத்தை விடவும் அதிகமான வாக்குகள் கிடைக்காது போகும் பட்சத்தில் மீண்டும் தேர்தலை நடத்தாது அந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலேயே இந்த விருப்பத் தெரிவு முறைமை பின்பற்றப்படுகின்றது.

விருப்பத் தெரிவு வாக்குகள் எவ்வாறு எண்ணப்படும் என்பது தொடர்பாக உதாரணங்களுடனான விளக்கத்தைப் பார்ப்போம்.

தேர்தலில் A, B, C, D மற்றும் E என்ற வேட்பாளர்கள் போட்டியிடுவதாக எடுத்துக்கொண்டால் அவர்களில் ஒருவரை தெரிவு செய்வதற்காக அளிக்கப்பட்டுள்ள வாக்குகளில் 100 வாக்குகள் செல்லுபடியான வாக்குகளாக கருதுவோம். இதன்படி A = 40 , B = 35 , C = 15 , D = 6 , E = 4 என்ற அடிப்படையில் வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளனர் என்று வைத்துக்கொள்வோம்.

இவ்வாறாக இவர்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளுக்கமைய எவரும் 50 வீத வாக்குகளை பெற்றுக்கொள்ளவில்லை. இதனால் விருப்பு வாக்குகளை எண்ண வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.  இதன்போது முதல் இரண்டு இடங்களை வகிப்பவர்களை தவிர்த்து மற்றையவர்கள் போட்டியிலிருந்து விலக்கப்பட்டவர்களாக கருதப்படுவர். இதன்படி இந்த இடத்தில் A என்பவரும் B என்பவரும் முதல் இரண்டு இடங்களை வகிக்கின்றனர். C , D , E ஆகியோர் போட்டியிலிருந்து விலக்கப்படுகின்றனர். ஆனபோதும் C , D , E ஆகியோருக்குரிய 25 வாக்கு வாக்கு சீட்டுகளும் A மற்றும் B ஆகியோருக்கு கிடைத்துள்ள  2 ஆம் , 3 ஆம் விருப்பு வாக்குகளை எண்ணுவதற்காக எடுத்துக்கொள்ளப்படும்.

இவ்வேளையில் முதல் இரண்டு இடங்களை பெற்றுக்கொண்டுள்ள A என்பவருக்கும் B என்பவரினதும் முதலில் எண்ணப்பட்ட வாக்குச்சீட்டுகள் மீண்டும் எண்ணுவதற்கு எடுத்துக்கொள்ளப்படாது. அத்துடன் அந்த வாக்கு சீட்டுகளில் காணப்படும் விருப்பத் தெரிவு வாக்குகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.

இதனைத் தொடர்ந்து 15 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ள C என்பவரின் வாக்குச் சீட்டுகள் அனைத்தும் பரிசீலிக்கப்படும். இதன்போது Cயிற்காக மாத்திரம் புள்ளடியிடப்பட்ட மற்றும் அவருக்கு 1 என்று குறிப்பிட்டு வேறு யாருக்கும் விருப்பு வாக்குகள் குறிப்பிடப்படாத வாக்குச்சீட்டுகள் ஒதுக்கப்படும். இதன் பின்னர் Cயிற்கு 1 எனவும் A அல்லது Bயிற்கு 2 எனவும் விருப்பத் தெரிவு வாக்கு வழங்கப்பட்டிருக்குமாயின் Aயிற்குறிய வாக்கு சீட்டு அதற்குரிய பெட்டியிலும் Bயிற்குறிய வாக்கு சீட்டு அதற்குறிய பெட்டியிலும் போடப்படும்.

இதேவேளை Cயிற்கு 1 என குறிப்பிடப்பட்டுள்ள வாக்கு சீட்டியில் 2 ஆவது விருப்பு வாக்கு Dயிற்கோ அல்லது Eயிற்கோ குறிப்பிடப்பட்டிருந்தால் 3 ஆவது விருப்பு வாக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ளதா என ஆராயப்படும். அவ்வாறாக 3 ஆவது விருப்பு வாக்கு Aயிற்கோ அல்லது Bயிற்கோ குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த வாக்கு சீட்டு A அல்லது B ற்காக ஒதுக்கப்பட்டுள்ள குறித்த பெட்டியினுள் போடப்படும். ஆனபோதும் அந்த வாக்கு சீட்டில் 2 ஆவது விருப்பு வாக்கு Dயிற்கும் 3 ஆவது விருப்பு வாக்கு Eயிற்கும் குறிப்பிடப்பட்டிருந்தால் அது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாது ஒதுக்கி வைக்கப்படும்.

இதேவேளை D மற்றும் E ஆகியோருக்குரிய வாக்குச்சீட்டுகளும் ஆராயப்பட்டு A அல்லது Bயிற்கு 2 மற்றும் 3 ஆம் விருப்பு வாக்குகள் குறிப்பிடப்பட்டிருந்தால் அதற்குரிய பெட்டிகளுக்குள் போடப்படும். இவ்வாறாகவே C , D , Eக்குரிய 25 வாக்குகளும் எண்ணப்பட்டு A , Bக்குரிய விருப்பு வாக்குகள் ஆராயப்படும்.

இவ்வாறாக 2ஆம் மற்றும் 3ஆம் விருப்பத் தெரிவு வாக்குகளை எண்ணும் போது  Aயிற்கு 3 மேலதிக வாக்குகளும் Bயிற்கு மேலதிகமாக 10 வாக்குகளும் கிடைத்துள்ளதாக கருதுவோமாகவிருந்தால் Aயிற்கு முதலில் கிடைத்த வாக்குகள் அடங்கலாக மொத்தமாக 43 வாக்குகள் ( A= 40+3 = 43) கிடைத்துள்ளன. அதேபோன்று Bயிற்கு 45 வாக்குகள் (B = 35+10 = 45)கிடைத்துள்ளன.  இதன்படி தற்போது 88 வாக்குகள் செல்லுபடியான வாக்குகளாக இருக்கின்ற நிலையில் அவற்றில் அதிக வாக்குகளைப் பெற்ற B என்பவர் வெற்றி பெற்றவராக கருதப்படுவார்.

இதேவேளை 2 ஆம் மற்றும் 3 ஆம் விருப்பத் தெரிவு வாக்கு எண்ணும் நடவடிக்கையின் பின்னர் A என்பவரும் B என்பவரும் சமமான வாக்குகளை பெற்றுக்கொள்வார்களாக இருந்தால் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் திருவுளச்சீட்டு மூலம் மேலதிக வாக்கொன்றை வேட்பாளர் ஒருவருடன் இணைத்து அவரை வெற்றி பெற்றவராக அறிவிக்க நடவடிக்கையெடுக்கப்படும்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்காவிட்டால் மேற்கூறிய முறைமையே பின்பற்றப்படும்.

இதேவேளை இந்தத் தேர்தலில் 1 , 2 , 3 ஆம் விருப்பத் தெரிவு அடிப்படையில் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதற்கு எண்ணியுள்ள வாக்காளர்கள் சில விடயங்களை அறிந்துகொள்ள வேண்டியுள்ளது.

அதாவது தேர்தலில் 39 வரையான வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதும் அவர்களில் நால்வருக்கிடையில் கடும் போட்டி நிலவுகின்றது. இவ்வாறான நிலைமையில் பிரதான வேட்பாளர்களாக கருதப்படுபவர்களுக்கு 1 ஆம் விருப்பை வழங்கிவிட்டு மற்றைய சாதாரண வேட்பாளர்களுக்கு 2 , 3 ஆம் விருப்பு வாக்குகள் வழங்கப்படுமாக இருந்தால் இரண்டாவது வாக்கு எண்ணும் நடவடிக்கையில் போது அந்த வாக்குச்சீட்டு கவனத்தில் கொள்ளப்படாதவொன்றாகவே அமையும்.

குறிப்பாக யாருக்கும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்காத பட்சத்தில் 2 ஆம் , 3 ஆம் விருப்ப தெரிவு வாக்குகளை எண்ணும் போது அதிகூடிய வாக்குகளை பெற்றுக்கொண்ட இரண்டு வேட்பாளர்களுக்கு கிடைத்துள்ள 2 , 3 ஆம் விருப்பு வாக்குகள் மாத்திரமே எண்ணப்படும். இவ்வேளையில் ஏற்கனவே பிரதான வேட்பாளர்கள் இருவருக்கும் கிடைத்துள்ள 1ஆம் விருப்பு வாக்கு எண்ணப்பட்டிருப்பதால் அந்த வாக்கு சீட்டுகள் மீண்டும் வாக்கு எண்ணப்படும் போது எடுத்துக்கொள்ளப்படாது. இதன்போது அவர்கள் இருவர் தவிர்த்த மற்றைய வேட்பாளர்களுக்காக முதலாம் விருப்ப தெரிவு வாக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குச்சீட்டுகளில் 2 , 3 ஆம் விருப்ப தெரிவு வாக்குகளே எண்ணப்படும்.