September 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை – உகண்டா ஜனாதிபதிகள் சந்திப்பு!

உகண்டாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் உகண்டா ஜனாதிபதி யொவேரி முசேவேனி ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (20) பிற்பகல் நடைபெற்றது.

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சிநேகபூர்வமான வரவேற்பளித்த உகண்டா ஜனாதிபதி, சிறிது நேரம் சுமூகமாக கலந்துரையாடிய பின்னர் இரு நாட்டு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தையை ஆரம்பித்தனர்.

தனது அழைப்பையேற்று வருகைத் தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றி தெரிவித்த உகண்டா ஜனாதிபதி யொவேரி முசேவேனி, சரிவடைந்திருந்த நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தைப் பாராட்டியதோடு, அதற்காக நாட்டு மக்களின் பாராட்டும் கிட்ட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

இலங்கையின் புதிய பொருளாதார வேலைத்திட்டம் தொடர்பில் இதன்போது தலைவர்கள் கலந்துரையாடியதோடு, சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் பின்னர் இலங்கை, பொருளாதார ரீதியில் முன்னோக்கி பயணிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மேலும், இலங்கை 2024 ஆம் ஆண்டின் புதிய அபிவிருத்தி இலக்குகளை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்திருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

சரிவடைந்த இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது மிகக் கடினமானதாக அமைந்திருந்த வேளையில், அந்தப் பொறுப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வழங்கவேண்டும் என்பதே இலங்கையின் மத்தியஸ்த நிலைப்பாட்டைக் கொண்ட பலரின் நிலைப்பாடாக இருந்தென சுட்டிக்காட்டிய வெளிவிவகார அமைச்சர், இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் குறுகிய கால திட்டங்களினால் இன்று இலங்கையின் பொருளாதாரம் நிலைத் தன்மையை அடைந்துள்ளதாகவும், அதனால் பலரும் அவரைப் பாராட்டுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை – உகண்டாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை புதிய துறைகள் ஊடாக மேலும் பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் இதன்போது தீர்க்கமாக பேசப்பட்டது.

காலநிலை அனர்த்தம் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, உகண்டாவிற்கான இலங்கை தூதுவர் வீ.கனநாதன் உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினரும் இதன்போது கலந்துகொண்டனர்.