May 19, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுகாதார ஊழியர்கள் வேலை நிறுத்தம்: நோயாளர்கள் அவதி!

File Photo

இலங்கை முழுவதும் அரச வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் தவிர்ந்த சுகாதார ஊழியர்கள் இன்று காலை முதல் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

72 சுகாதார தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் இன்று காலை 6.30 மணி முதல் வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டணி தெரிவித்துள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள், , மருத்துவ ஆய்வக விஞ்ஞானிகள், கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள், மருந்தாளர்கள், கண் தொழில்நுட்ப வல்லுநர்கள், பல் தொழில்நுட்ப வல்லுநர்கள், சுகாதார முகாமைத்துவ உதவி சேவைகள், சுகாதார அம்பியூலன்ஸ் ஊழியர்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வைத்தியர்களுக்கு அரசாங்கம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ள 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்க வேண்டுமென கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த போராட்டத்தால் நோயாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு முப்படையினரையும் கடமையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய முப்படையினர் வைத்தியசாலைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.