June 17, 2025 22:28:35

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பரீட்சைகளில் சித்தியடைய பாடசாலை வருகை கட்டாயம்: புள்ளித் திட்டம் வரும்!

பாடசாலைகளுக்கு தினசரி மாணவர்களின் வருகை கட்டாயமானது என்றும் அதற்கான புள்ளி திட்டமொன்று அறிமுகவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நிவித்திகலவில் நடைபெற்ற தம்மானந்தா ஞாபகார்த்த புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

புதிய கல்வி மறுசீரமைப்புக்கமைய, ஐந்தாம் புலமைப்பரிசில் பரீட்சையில் கூட, நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்புகளில் மாணவர்கள் வகுப்பறையில் தங்கியிருந்து பெற வேண்டிய புள்ளிகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருப்பதால், எதிர்காலத்தில் மாணவர்கள் பரீட்சைகளில் சித்தி அடையும் வகையில் பாடசாலைகளுக்கு தினசரி வருகை தருவது அவசிமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்வி என்பது ஒரே நேரத்தில் ஆயிரத்து ஐநூறு பிள்ளைகள் ஒரு மண்டபத்தில் கூட்டி கருத்தரங்குகளை நடத்துவது அல்ல, இது குழந்தைகளின் ஒழுக்கம் மற்றும் பல திறன்களை வளர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய ஒரு சிக்கலான செயல்முறையாகும். ஆனால் கல்வியை வர்த்தகம் சார்ந்த தொழிலாகப் பரிணமித்திருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைவதென்பது வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெறுவது என்பதல்ல, மாணவர்களுக்கு அரசாங்கம் வருடாந்தம் வழங்கக்கூடிய புலமைப்பரிசில் நிதியின் அளவைப் பொறுத்தே வெட்டுப்புள்ளி தீர்மானிக்கப்படுகின்றது. இதனால், அந்த மதிப்பெண்களின் அடிப்படையில் பிள்ளைகளை அளவிடுவது நியாயமில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.