May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மட்டக்களப்பில் ரணில்: மக்கள் போராட்டம் – வீதியில் குவிக்கப்படும் பொலிஸார்!

மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் நிலம் தொடர்பான பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு பண்ணையாளர்கள் மூன்று வாரங்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், பண்ணையாளர்கள் இன்று வீதியில் இறங்கி போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.

”ரணில்.. ரணில்.. போ போ.. மயிலத்தமடு மாதவனை எங்களுக்கு வேண்டும்” என கடுமையாக கோஷம் எழுப்பி வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனும் கலந்துகொண்டுள்ளார்.

இவர்கள் வீதிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அந்தப் பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். வீதித்தடைகளை போட்டு போராட்டக்காரர்களை முன்னால் செல்ல விடாது பொலிஸார் தடுத்து நிறுத்தியதால், பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் முறுகல் நிலையும் ஏற்பட்டுள்ளது.

மேலும், பொலிஸாரின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், இல்லையேல் கைது செய்யப்படுவீர்கள் என ஒலிபெருக்கி மூலம் போராட்டக்காரர்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகின்றது.

எனினும் பண்ணையாளர்கள் தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

This slideshow requires JavaScript.