
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விநியோகிக்காது தடுத்து வைத்திருப்பதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தினால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி தேர்தலுக்கான நிதி, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்படாமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியினால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை அடிப்படையாகக் கொண்டே நீதிமன்றம் இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
இதேவேளை உள்ளூராட்சி தேர்தல் தினம் தொடர்பில் அடுத்த வாரத்தில் அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மார்ச் 9 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்த போதும், போதுமான நிதி கிடைக்காமையினால் தேர்தல் தினம் தீர்மானிக்கப்படாது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் மார்ச் 9 ஆம் திகதிக்கு முன்னர், தேர்தலுக்கான தினம் தொடர்பில் அறிவிக்கப்படும் என்று இன்றைய தினத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.