
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ”நமோ நமோ மாதா – நூற்றாண்டில் காலடி” என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு காலிமுகத்திடலில் இன்று காலை சுதந்திர தின பிரதான நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன.
2048 ஆம் ஆண்டில் கொண்டாடப்படவுள்ள 100 ஆவது சுதந்திர தினம் வரை மாறாத அரச கொள்கையை கொண்டதாக 25 ஆண்டுகளுக்காக அரசாங்கத்தின் புதிய சீர்திருத்த திட்டத்துடன் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட அரசாங்கம் தயாராகியுள்ளது.
சுதந்திர தினத்திற்காக அரசாங்கம் அதிகளவில் செலவு செய்வதாக பல்வேறு தரப்பினரால் முன்னெடுக்கப்படும் விமர்சனங்களுக்கு மத்தியிலும் பல்வேறு நிகழ்வுகளுடன் சுதந்திர நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளது.
வழமைப் போன்று முப்படையினரின் அணிவகுப்பு மரியாதைகள் மற்றும் கலாசார நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
சுதந்திர தின கொண்டாட்டத்தில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண ஆளுநர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், தூதுவர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட 3100க்கும் அதிகமானவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.