June 13, 2025 13:48:38

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழில் மதத் தலைவர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்!

தேசிய தைப்பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணம் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கு மதத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இன்று காலை பலாலி விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதி, அங்கிருந்து ஸ்ரீ நாக விகாராதிபதி மீகஹஜந்துரே சிரிவிமல நாயக்க தேரரைச் சந்தித்து நலம் விசாரித்த ஜனாதிபதி , அவரின் உடல் நலன் குறித்தும் கேட்டறிந்ததோடு சிறிது நேரம் அவருடன் உரையாற்றினார்.

அதனை தொடர்ந்து நாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரால் செத்பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசி வழங்கப்பட்டது.

“பௌத்த இந்து சமய மன்றம்” சார்பில் ஜனாதிபதியை அதன் தலைவர் கலாநிதி எம்.மோகன் வரவேற்றார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமியை சந்தித்து ஆசி பெற்றார்.

அடுத்து யாழ் ஆயர் இல்லத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி , யாழ்.ஆயர் கலாநிதி ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்து சிறிது நேரம் கலந்துரையாடினார்.

இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.