
ஜனவரி 15 ஆம் திகதி முதல் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை திட்டமிட்டுள்ளது.
மின் கட்டண திருத்தம் தொடர்பில் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
இதன்படி, விலை சூத்திரமொன்றை தயாரித்து அதற்கமைய கட்டண மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இங்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய மின் கட்டணம் தொடர்பிலான தரவுகளை ஒரு மாதத்திற்குள் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அதன் பிரகாரம், 0 -30 அலகுகளுக்கான நிலையான கட்டணம் 120 ரூபாவிலிருந்து 400 ரூபா வரையிலும், 31-60 அலகுகளுக்கான நிலையான கட்டணம் 240 ரூபாவிலிருந்து 550 ரூபா வரையிலும் அதிகரிக்கவுள்ளது.
60-90 அலகுகளுக்கான நிலையான கட்டணமும் 90-180 அலகுகள் வரையான நிலையான கட்டணமும் முறையே 650 ரூபாவாகவும் 1500 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.
180 அலகுகளுக்கு மேல் 1500 ரூபாவாக இருந்த நிலையான கட்டணம் 2000 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.