
மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுகள் காரணமாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ஷ, மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 6 பேருக்கு கனடாவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
1983 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற சிவில் யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கனடா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதிகளுடன் முன்னாள் இராணுவ அதிகாரிகளான சுனில் ரத்நாயக்க மற்றும் சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சி ஆகியோருக்கும் கனடாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், கனடாவில் இவர்களுக்கு உள்ள அனைத்து சொத்துகளும் முடக்கப்படுவதுடன், அவர்கள் எந்த வகையிலும் நாட்டிற்குள் பிரவேசிக்க முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஆயுதப் போராட்டம், பொருளாதாரம் மற்றும் அரசியல் ஸ்திரமின்மையால் மனித உரிமை மோசமாக மீறப்பட்டுள்ளமையால், இலங்கைவாழ் மக்கள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளமையால், சர்வதேச சட்டத்தை மீறியவர்களுக்கு எதிராக கனடா கடுமையான தீர்மானங்களை எடுத்துள்ளதாக கனடா வெளிவிவகார அமச்சர் கூறியுள்ளார்.