October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிளிநொச்சிக்குள்ளும் நுழைந்தது கொரோனா; கொழும்பிலிருந்து சென்றவருக்கு தொற்று உறுதியானது

கிளிநொச்சி மாவட்டம், கண்டாவளைப் பிரதேசத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் உணவகம் ஒன்றில் பணியாற்றிய இவர், கடந்த 28ஆம் திகதி கிளிநொச்சி, கண்டாவளைப் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தர்மபுரம் கிராமத்துக்கு வருகை தந்துள்ளார்.

குறித்த நபர் வருகை தந்தவுடன் அவர் உடனடியாக சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கண்டாவளை பிரதேச வைத்திய அதிகாரியும் பொதுச் சுகாதார பரிசோதகரும் விழிப்பாகச் செயற்பட்டமையால் உடனடியாக குறித்த நபர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவர் பணியாற்றிய உணவக உரிமையாளர் மற்றும் அங்கு கடமையாற்றிய சில பணியாளர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டமையையடுத்து இவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போதே கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனாத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில், கிளிநொச்சி மாவட்டம் மாத்திரமே கொரோனாத் தொற்றாளர்கள் இன்றிய மாவட்டமாக இருந்த நிலையில், இன்று முதலாவது கொரோனாத் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.