
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியாணம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் வெளியிட்ட கருத்து தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, சபாநாயகரை கேட்டுக்கொண்டுள்ளார்.
குறித்த கருத்து தொடர்பில் தெரிவுக் குழுமை அமைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சபாநாயகருக்கு கடிதமொன்றை அனுப்பி நீதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் (21ஆம் திருத்தம்) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, உரையாற்றிய சுமந்திரன் எம்.பி, குறித்த சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள வியாக்கியாணம் சட்டத்திற்கு உட்பட்டது அல்லவெனவும், உயர்நீதிமன்றம் அடிக்கடி சட்ட நிலைப்பாடுகளை மாற்றி தனது நிலைப்பாட்டை அறிவிப்பதாகவும் கூறியுள்ளமை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது என்று நீதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கு அமைய முறையாக முன்வைக்கப்படும் பிரேரணைகளை தவிர, நீதிமன்றம் தொடர்பாகவோ, நீதிபதிகள் தொடர்பாகவோ விமர்ச்சிக்கக் கூடாது எனவும், இதனால் சுமந்திரன் வெளியிட்ட கருத்து தொடர்பில் தெரிவுக் குழுவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதி அமைச்சர் சபாநாயகரை கேட்டுக்கொண்டுள்ளார்.