June 11, 2025 15:45:35

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை!

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்துக் கட்சிகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் ஒவ்வொரு கட்சியில் இருந்தும் குறைந்தது ஒருவரையாவது உள்ளடக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்யுமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

அதன்படி எதிர்வரும் வாரங்களில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் – முஸ்லிம் கட்சிகள் இதில் உள்வாங்கப்படவுள்ளன.

எனினும் ஜே.வி.பி இதில் இணைந்துகொள்ளாது என்றும், எதிர்க்கட்சியில் இருந்து ஆதரவளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர் வெற்றிடமாகிய ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவுக்கும் அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.