
வர்த்தகர் தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்பதனை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுத்தக்கொள்ளாமலேயே நிராகரிப்பதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய அவர் நாளைய தினம் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார்.
முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் இராஜினாமவை தொடர்ந்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டில் உறுப்பினராக தம்மிக்க பெரேராவை நியமிப்பதாக அந்தக் கட்சி தீர்மானித்துள்ளது.
எனினும் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா பெயரிடப்பட்டுள்ளமைக்கு எதிராக மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் உள்ளிட்ட சில தரப்பினரால் உயர் நிதிமன்றில் அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
அரசியலமைப்பின் 99 ஏ பிரிவின் படி அரசியல் கட்சியினால் பரிந்துரைக்கப்பட்ட ஒருவரையே தேசியப்பட்டியல் உறுப்பினராக தெரிவு செய்யமுடியும் எனவும், ஒன்று அவர் தேர்தலில் போட்டியிட்டவராகவோ அல்லது ஏற்கனவே தேசியப் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டவராகவோ இருக்க வேண்டும் என்றும் மனுக்களில் கூறப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலைமையில், இந்த மனுக்கள் தொடர்பான, தீர்ப்பு அறிவிக்கப்படும் வரையில் எம்.பியாகவோ, அமைச்சராகவோ பதவியேற்கப் போவதில்லை என்று தம்மிக்க பெரேரா அறிவித்திருந்தார்.
இந்நிலையில் குறித்த மனுக்களை நிராகரிப்பதாக இன்று நீதிமன்றம் அறிவித்ததை தொடர்ந்து, அவர் எம்.பியாக பதவியேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.