October 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”மீரிஹான போராட்டத்துடன் ஒழுங்கமைக்கப்பட்ட குழுவுக்கு தொடர்புள்ளது”: ஜனாதிபதி ஊடகப் பிரிவு!

மீரிஹானவில் நேற்று இரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படைவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று இரவு ஜனாதிபதியின் மீரிஹானவில் உள்ள இல்லத்திற்கு அருகில் கூடிய ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து பொலிஸாரினால் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு, இரும்புக் ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளுடன் ஆயுதம் ஏந்திய குழுவினர், ஆர்ப்பாட்டக்காரர்களைத் தூண்டிவிட்டு, மிரிஹான பங்கிரிவத்தையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்று கலவரத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினருக்கு இடையில் ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படைவாதிகள் குழுவொன்று வன்முறைச் சூழலை ஏற்படுத்தியமை தெரியவந்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ”நாட்டில் அரபு வசந்தத்தை உருவாக்குவோம்” என கோசமிட்டு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும், திட்டமிட்ட வகையில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மக்களைத் தூண்டிவிட்டு நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்தியுள்ளமை கைது செய்யப்பட்ட நபர்கள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.