October 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க வேலைத்திட்டம்!

உலகளாவிய ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் மூலம் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் இலங்கையில் திட்டங்களை வகுக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 260,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இது கடந்த ஆண்டு சுற்றுலா பயணிகளின் வருகையை விட அதிகமாகும். இந்நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் 1.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலக்கை அடைய அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

இதற்கு சுற்றுலாத்துறையின் சகல பிரிவுகளும் தயாராக வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையை இன்று பார்வையிட்டபோதே ஜனாதிபதி, இதனைத் தெரிவித்துள்ளார்.

திட்டமிட்டமுறையிலும் முறையான சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்தின் ஊடாகவும் விரைவான பொருளாதார அபிவிருத்திக்காக 1966 இல் சுற்றுலா சபை ஸ்தாபிக்கப்பட்டதோடு, 2005 இல் அது, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையாக மாற்றப்பட்டது.

சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருதல், தங்குமிடம் மற்றும் ஓய்வு விடுதிகளைத் திட்டமிடல், சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலா நிறுவனங்கள் உள்ளிட்ட சுற்றுலா சேவைகளைப் பதிவு செய்தல் மற்றும் வகைப்படுத்துதல், உரிமங்களை வழங்குதல் உள்ளிட்ட சுற்றுலாத் கைத்தொழிலுடன் தொடர்புடைய அனைத்து துறைகளையும் மேற்பார்வையிட சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம், ஹோட்டல் முகாமைத்துவ பயிற்சி நிறுவனம் மற்றும் மாநாட்டு பணியகம் என்பனவற்றை பார்வையிட்ட ஜனாதிபதி, சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் ஊழியர்களை பாராட்டினார்.

சுற்றுலாத்துறையில் இருந்து ஆண்டுக்கு 10 பில்லியன் டொலர்களை திரட்ட அரசு இலக்கு வைத்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் சுற்றுலாத்துறையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இது கொவிட் தொற்றுநோயால் மேலும் வீழ்ச்சியடைந்தது. உரிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி சுற்றுலாத் துறையின் விரைவான வளர்ச்சிக்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துள்ளது.

தடுப்பூசி வேலைத்திட்டத்தின் வெற்றியினால் சுற்றுலாத்துறை மீண்டும் வளர்ச்சியடைந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இதன்போது தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புகள் உள்ளன.

அதற்கேற்ப பயிற்சிகளை விரிவுபடுத்த வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதேவேளை, விமான நிறுவனங்களுடன் கலந்துரையாடி இலங்கைக்கான விமானப் பயண எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

யால, குமண, மின்னேரியா மற்றும் ஏனைய பூங்காக்கள் மற்றும் கரையோரப் பகுதிகளை சுற்றுலாத் தலங்களாகப் பேணுவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.