October 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”நாம் உங்களை கைவிடமாட்டோம்”: யாழில் பிரதமர் மகிந்த

வடக்கு மாகாணத்தில் 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்திச் செயற்பாடுகளையும், மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளையும் ஆரம்பிப்போம் என்று பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், விசேட பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

30 ஆண்டுகளாக இருந்த இருண்ட யுகத்தை 2009 ஆம் ஆண்டில் முடிவுக்கு கொண்டு வந்ததாக தெரிவித்த பிரதமர், அதன்பின்னர் வடக்கு மக்களுக்காக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்தாக தெரிவித்துள்ளார்.

ஆனால் 2015 இல் அந்த அபிவிருத்திகளுக்கு இடையூறு ஏற்படுத்தி நல்லிணக்கம் என்ற திட்டம் வந்ததாகவும், அந்த நல்லாட்சி காலத்தில் ஒரு வீதி அபிவிருத்தியோ அல்லது மின்சார திட்டமோ யாழ்ப்பாணத்திற்கு கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் நாம் அதை மீண்டும் தொடங்க வேண்டும். 2019ஆம் ஆண்டு மீண்டும் இந்த நாட்டைக் கைப்பற்றிய போது, நல்லாட்சியின் மூலம் பின்னோக்கிச் சென்ற நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப திட்டமிட்டோம் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.