October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதி தலைமையில் ‘பொருளாதாரப் பேரவை’ நியமனம்!

பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு தீர்வுகண்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் பொருளாதார பேரவையை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி இந்தப் பேரவையை அமைப்பதற்காக திங்கட்கிழமை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

பெருநிலைப் பொருளாதாரக் கொள்கை, கொவிட் – 19 பெருந்தொற்று நிலைமையின் பின்னர் தேசிய பொருளாதாரத்தின் செயற்பாடு, பொருளாதார மீள்கட்டமைத்தல், அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை மற்றும் நிதிக் கொள்கைகளில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய அபிவிருத்திக் கருத்திட்டங்கள் உள்ளிட்ட உள்ளூர் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பாக மிகவும் ஆழமாகக் கலந்துரையாடி தீர்மானங்களை முன்வைக்கும் வகையில் இந்த பேரவையை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பேரவையின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கமைய ஏற்புடைய அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்கள் தேவையான சந்தர்ப்பங்களில் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் இயைபுடைய தீர்மானங்களை நடைமுறைப்படுத்தவும், தேவைக்கேற்ப பொருளாதாரப் பேரவைக் கூட்டத்திற்கு போதுமான துறைசார் அறிவுகொண்ட கல்வியியலாளர்களை அழைக்கவும், ஜனாதிபதியினால் மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படும் படிமுறைகள் தொடர்பாக அமைச்சரவையின் உடன்பாட்டை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.

பேரவையின் உறுப்பினர்களாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ (தலைவர்), பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ, வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ, நிதி அமைச்சர் கலாநிதி பஸில் ராஜபக்‌ஷ, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுக்கமகே, பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன, இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், திறைசேரி செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல, இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் தம்மிக்க நாணயக்கார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பேரவையை வாராந்தம் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.